இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு பெயர் எதுவும் இல்லை. இந்தியாவில் மொத்தம் 7112 ரயில் நிலையங்கள் உள்ளது. அதில் இந்த ரயில் நிலையம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதோடு இதற்கு பெயர் எதுவும் இல்லை. பர்தமான் மாவட்டத்தில் ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையில் இந்த நிலையம் அமைந்துள்ளது. முதலில் இதற்கு அதிகாரப்பூர்வமாக ராய்நகர் என்ற பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் ரெய்னா கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது கிராம பெயரை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் இரு கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கமாக ரயில் நிலையத்தில் இருக்கும் மஞ்சள் போர்டுகளில் ரயில் நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள பலகை காலியாக இருக்கும். இதன் வழியாக தினமும் ஒரு ரயில் மட்டுமே இயங்குகிறது. தினமும் 6 முறை இந்த கிராமத்தை அந்த ரயில் கடந்து செல்கிறது.

இதனால் அங்கு வரும் புதிய பயணிகள் குழப்பத்திற்கு ஆளானார்கள். இது குறித்து அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் நவக்குமார் நந்தி கூறியதாவது, ரயில்வே துறை சார்பில் ஒரு பெயர் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து கிராமத்தினர் நீதிமன்றத்திற்கு சென்றனர். இப்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, நீதிபதி உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.