கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொல்லரஹட்டியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவா(13) என்ற மகனும், 8 வயதில் மகளும் உள்ளன. இதில் துருவா அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். துருவா அடிக்கடி செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் செல்போன் பார்க்கக்கூடாது, படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி அன்று பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த துருவா மற்றும் அவரது தங்கை வீட்டில் தனியாக இருந்துள்ளனர். தாய் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியில் துருவா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவரது தங்கையும் இதனை பார்த்து உள்ளார். இதற்கிடையில் வெளியே சென்றிருந்த தாய் வீட்டிற்கு வந்ததும், தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் பார்க்கக் கூடாது, படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று சிறுவனை திட்டியதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.