சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்தி சென்று சில இளைஞர்கள் அத்துமீரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞர்கள் பெண்களை துரத்திய காரில் திமுக கொடி இருந்ததால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி 4‌ பேரை கைது செய்த நிலையில் அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த வாலிபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த சம்பவம் நடந்தபோது காரில் இருந்த வாலிபர்கள் மதுபோதையில் இல்லை எனவும், அந்த சம்பவத்திற்கும் திமுக கட்சி கொடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காரின் ஓட்டுனர் தான் பார்க்கிங் மற்றும் சுங்கத்துறை கட்டணத்தில் இருந்து தப்பிக்க திமுக கொடியை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைதான 4 பேரையும் சோழிங்கநல்லூர் நீதிமன்றம் மேஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் அனைவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மொத்தம் 7 பேருக்கு தொடர்புள்ள நிலையில் மீதமுள்ளவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.