சென்னை ஈ சிஆரில் திமுக கொடியுடன் சில வாலிபர்கள் பெண்களை துரத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது விவகாரத்தில் மொத்தம் ஏழு பேருக்கு தொடர்பு இருந்த நிலையில் காவல்துறையினர் அவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கிடையாது எனவும் அந்த காரின்  ஓட்டுநர் சுங்க கட்டணம் போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்காக திமுக கொடியை பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்துரு என்பவர் எனக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு கிடையாது எனவும் என்னுடைய குடும்பத்தினை சேர்ந்தவர்கள் அதிமுகவினர்கள் என்றும் வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த வீடியோவை தற்போது அமைச்சராக அகுபதி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.

திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது. திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?