
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 56-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி மேற்கொண்டனர். இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு மற்றும் திமுக எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி தொடங்கிய நிலையில் அண்ணா சதுக்கத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தற்போது முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:
“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”
தந்தை பெரியாரின் புகழொளியையும் – அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!
நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!
வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!
மேலும் சமீப காலமாக பெரியார் பற்றிய சீமான் கடுமையாக விமர்சித்து வருவது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்றும் லட்சிய பயணத்தில் வெல்ல பாடுபடுவோம் என்றும் அண்ணா நினைவு தினத்தில் சபதம் எடுப்பது போல் அறிக்கை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.