
சென்னை மாவட்டம் மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி புனிதா. இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் லால்குடியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் மேலவாளாடி அருகே சென்றபோது ஒரு நாவல் மரம் முறிந்து இருசக்கர வாகனம் மீது விழுந்தது.
இதனால் படுகாயமடைந்த சுதர்சனும், புனிதாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே மரம் விழுந்ததால் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உயிரிழந்த இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.