சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிறுமியை வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சிறுமி வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்ட நிலையில் உடனடியாக ஓடி வந்த சிறுமியின் தாய், நாயிடமிருந்து தன் மகளை மீட்டார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும் நிலையில் இது தொடர்பாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் வளர்ப்பு நாய் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.