தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா பகுதியில் ஒருவர் தன்னுடைய மகளின் செயலில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

46 வயதான ரெமுதாலா கட்டையா என்பவர் தனது 20 வயது மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், காதல் ஜோடி வீட்டைவிட்டு தப்பி சென்று திருமணம் செய்து கொண்டனர்.

மகள் காணாமல் போன நிலையில், கட்டையா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணையில் காதல் ஜோடி திருமணமாகி விட்டது தெரிய வந்ததும், கட்டையா அதிர்ச்சியடைந்தார்.

ஆனால் மகளிடம் பேசவேண்டும் என்ற ஆசையுடன் பலமுறை முயற்சி செய்தும், அவர் பேச மறுத்துவிட்டதால் மன உளைச்சலில் சிக்கினார். மனதளவில் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளான அவர், நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அதிதுரிதமாக சம்பவ இடத்தை அடைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தொடர்பான வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தந்தையின் மரணத்திற்கான தகவலை மகளிடம் தெரிவித்த போதும், “நான் மும்பையில் இருக்கிறேன், வர முடியாது” என பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.