சிவகங்கை மாவட்டம் ஓசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குணசேகரன்- ஜெயலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் கடந்த மார்ச் 27ஆம் தேதி வேலைக்காக வெளியே சென்றபோது வீட்டை பூட்டி விட்டு சாவியை மீட்டர் பெட்டியின் உள்ளே வைத்தனர்.

இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் குணசேகரன் வீட்டினுள் நுழைந்து 120 கிராம் தங்கம், 40 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கு ஆகியவற்றை திருடி சென்றனர். வீட்டிற்கு திரும்பிய தம்பதியினர் வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது நகை பணம் உள்ளிட்டவை திருடு போனது தெரிய வந்தது.

அதனால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சிவகங்கை- மதுரை மாவட்ட எல்லையான வேங்கைப்பட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் மனைவி போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதனைப் பார்த்த போலீசார் இருவரையும் விரட்டிப் பிடித்தனர். பின்பு அவர்களிடம் விசாரித்த போது இருவரும் முன்னுக்கு பின்னால் முரணாக பதில் அளித்தனர்.

அதனால் போலீசாருக்கு இருவரின் மீதும் சந்தேகம் வந்தது எனவே இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தம்பதியினர் இருவரும் மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் இருவரும் பல்வேறு வகையான திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை அறிந்த போலீசார் அவர்களிடமிருந்து 80 கிராம் தங்கம், சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.