
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.
இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பாகிஸ்தானுக்கு எதிராக கடும் பதிலடி நடவடிக்கைகளை அறிவித்தது. அதில், அட்டாரி-வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தல், தூதரக அதிகாரிகளை வெளியேற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
“دریائے سندھ ہمارا ہے اور ہمارا ہی رہے گا، اِس دریا سے ہمارا پانی بہے گا یا اُن کا خون بہے گا۔@BBhuttoZardari
#ThanksBBZ pic.twitter.com/LfNVVW9TnT— PPP (@MediaCellPPP) April 25, 2025
இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஜாதாரி வெள்ளிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் கடும் விமர்சனத்துடன் இந்தியாவை குற்றம் சாட்டினார்.
“சிந்து நதி என்பது பாகிஸ்தானுக்கே சொந்தமானது. நதி வழியாக நமது தண்ணீர் ஓட வேண்டும், இல்லையென்றால் இந்தியர்களின் ரத்தம் ஓடும்,” என அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பஹல்காம் தாக்குதலை மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்காக இந்தியா பாகிஸ்தானை குறி வைக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
பாகிஸ்தான் அரசும் தனது பதிலடியாக இந்தியா உடனான அனைத்து வணிக நடவடிக்கைகளை நிறுத்தி, இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கையும், சிந்து நதிநீரை தடுக்கும் முயற்சியாக இருந்தால், அதை “போர் நடவடிக்கை” என்று கருதி பதிலடி எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நிலைமை தற்போது கடுமையான பதற்ற நிலையை உருவாக்கி உள்ளது.