
சிவகங்கை அருகே உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(27). இவர் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக இருந்துள்ளார். நேற்று மதியம் தோட்டத்திற்கு சென்ற பிரவீன் குமாரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பிரவீன் குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
பிரவீனை கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்களும், நண்பர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சாமியார் பட்டியைச் சேர்ந்த கருணாகரன்(20), பிரபாகரன்(19), குரு(21) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கருணாகரனின் தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். அதற்கு பிரவீன் தான் காரணம் என நினைத்து கருணாகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.