
வங்கி ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகள் தான் வைக்கப்படுகிறது. இதனால் 100, 200 போன்ற நோட்டுகளை பெற மக்கள் திண்டாடுகின்றனர். இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏடிஎம் களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆப்ரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, அடிக்கடி பொதுமக்கள் பயன்படுத்தும் 100, 200 போன்ற குறைந்த மதிப்பு கொண்ட பண தாள்களை ஏடிஎம்களில் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் 75 சதவீத ஏடிஎம்களில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது 100 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ள ரிசர்வ் வங்கி அனைத்து ஏடிஎம்களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31 தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.