திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியில்  முருகன் – விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் விஜயலட்சுமி மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வேகமாக வந்த கார் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த விஜயலட்சுமியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை நேரில் பார்த்தவர் துரத்தி சென்ற போது காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் செய்யாறு காவல் நிலையத்தில் விஜயலட்சுமியின் கணவர் முருகன் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, “எங்களுக்கும் செய்யாறு கிடங்கு தெருவை சேர்ந்த பிரபு மற்றும் கொடநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே மது விற்பனை தொடர்பாக பிரச்சனை இருந்தது. இந்நிலையில் விஜயலட்சுமியிடம் பிரபு மற்றும் வெங்கடேசன் கடந்த 25-ஆம் தேதி தகராறு செய்துள்ளனர். அப்போது பிரபு விஜயலட்சுமியிடம் என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். அவர்கள் தான் என்னுடைய மனைவியை கொலை செய்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.