
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சிறுவன் வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ரயிலை தவற விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த சிறுவன் தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது சிறுவன் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. பேருந்தில் ஏறிய சிறுவன் படிக்கட்டில் தொங்கியவாரே பயணித்துள்ளார்.
இதனை நடத்துனர் கண்டித்து பேருந்தின் உள்ளே ஏறுமாறு கூறியதால் நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தகராறில் ஈடுபட்ட சிறுவனை நடத்துனர் பாவூர்சத்திரம் அருகே பேருந்தில் இருந்து இறக்கி உள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் நடத்துனரை தாக்குவதற்காக பேருந்து நிலையத்திலேயே நின்றுள்ளார். அந்தப் பேருந்து திரும்பி வரும்போது தாக்குவதற்காக காத்திருந்துள்ளார். அதன்படி நெல்லை பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் அரசு பேருந்து பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு திரும்பி வந்துள்ளது. அப்பொழுது மது போதையில் இருந்த சிறுவன் நடத்துனரை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்த முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்த நடத்துனர் சிறுவனை தடுக்க முயன்ற போது கத்தரிக்கோல் நடத்துனரின் இடது காது பகுதியில் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சிறுவனை மடக்கி பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றதில் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்தவர் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அச்சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மது போதையில் நடத்துனரை கத்திரிக்கோலால் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.