பாகிஸ்தானில் இருந்து காதலனான சச்சினை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர். சீமாவுக்கும், சச்சினுக்கும் இடையேயான காதல் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டின் மூலம் தொடங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சீமா விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் நேபாளம் வழியாக சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.

இந்த சம்பவம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன் பின் நீதிமன்றத்தில் இருவரும் ஜாமின் பெற்ற பிறகு சீமாவும், சச்சினும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் சீமாவின் சட்ட விரோதமான இந்தியா நுழைவு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவர்களுக்கு கடந்த மார்ச் 8ஆம் தேதி அன்று நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து கணவரின் மரபுகளை பின்பற்றி ரபுபுரா கிராமத்தில் இவர்களது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ஏ.பி சிங்கும் கலந்து கொண்டார்.

இதனை அடுத்து சீமாவும், சச்சினும் தங்களது மகளுக்கு “பாரதி மீனா” என பெயரிட்டனர். தனது மகளுக்கு மீரா என புனைப்பெயர் வைத்ததாகவும் சீமா கூறினார். இதற்கு காரணம் கிருஷ்ணரின் பரம பக்தையான மீரா பாயின் பக்தியை உணர்த்தும் வகையில் தங்களது மகளுக்கு மீரா என்று பெயர் வைக்க விரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் பாகிஸ்தானிய பெண்ணான சீமா தனது மகளுக்கு இந்திய மரபுகள் முறையில் பெயர் வைத்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாகவும், இந்திய மரபுகள் அனைத்தும் தனக்கு புதியவை மற்றும் அழகானவை என்றும் கூறினார். மேலும் இவர்கள் இருவரும் சமீபத்தில் உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய அரசிடம் பாதுகாப்பு கேட்டு சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவில் சீமா தனது முன்னாள் கணவர் குலாம் சச்சினையும் அவர்களது வழக்கறிஞர் ஏ.பி. சிங்கையும் மிரட்டி வருவதாக கூறினார். தனக்கு புதிதாக பிறந்த குழந்தையைப் பற்றியும் தனது முன்னாள் கணவர் மோசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார். தற்போது பிறந்த குழந்தை சீமாவுக்கு நான்காவது குழந்தை. ஆனால் சச்சின் உடன் சீமாவுக்கு இது முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.