புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை என்ற கிராமத்தில் வசிப்பவர் செல்வராஜ் (56). இவருக்கு முதல் மகன் இன்பரசன் (24), இரண்டாவது மகன் இயலரசன்(20) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இன்பரசன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஊருக்கு வந்த இன்பரசன் தனது தந்தை செல்வராஜிடம் சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை கொடுக்குமாறு அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவ நாளன்று இரவு தந்தை செல்வராஜ் தனது நண்பன் உலகநாதனுடன் அவரது வீட்டில் மது அருந்திவிட்டு இருந்துள்ளனர். இதனையடுத்து இன்பரசன் தனது தந்தையைத் தேடி அவரது நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு மீண்டும் சொத்து கேட்டு இன்பரசன் தனது தந்தையிடம் சண்டையிட்டு உள்ளார். அப்போது தந்தை செல்வராஜூம் அவரது நண்பரும் போதையில் இருந்ததால் மகன் என்றும் கூட பாராமல் சுத்தியலால் ஓங்கி அடித்து உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இன்பரசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அறந்தாங்கி காவல்துறையினர் அங்கு சென்று இன்பரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து செல்வராஜ் மற்றும் உலகநாதன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர்.