கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு வருவாய்துறையினரும், குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு பொள்ளாச்சி குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ராஜு என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு கோவை 4-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் ஆஜராகும்படி கடந்த 6 மாதமாக நீதிமன்றம் சார்பில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக கடந்த 11-ஆம் தேதி திருச்சியில் வேலை பார்க்கும் ராஜுவுக்கு போலீசார் நேரில் சென்று வழக்கில் ஆஜராக அழைப்பானை கொடுத்தனர். ஆனாலும் ராஜு வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி அளிக்கவில்லை. இதனால் நீதிபதி சரவணபாபு, ராஜுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது ராஜு பதவி உயர்வு பெற்று திருச்சி தில்லைநகர் பகுதியில் போலீஸ் உதவி கமிஷனராக வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.