உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இதனை மத்திய பாஜக அரசின் சார்பாக ரூ.1800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என்று கடந்த நவம்பர் 2019 அன்று, அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதியான டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு பாஜக அரசு சார்பில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுகுறித்து நீதிபதி சந்திரசூட் தனது சொந்த ஊரான புனேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, சில வழக்குகள் ஒரு முடிவுக்கு வராத நிலையில் இருக்கும். அப்படி தான் இந்த வழக்கும். 3 மாதங்கள் என் முன் இருந்தது. அப்போது நான் தினமும் கடவுளுக்கு முன்னால் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும் படி வேண்டினேன். உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் அவர் நிச்சயம் ஒரு வழியை காண்பிப்பார் என்று கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சந்திரசூட் சென்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.