தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியினை அறிமுகப்படுத்தினார். அவருடைய கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கட்சியாக பதிவு செய்துள்ளது. அதன் பிறகு இன்று நடைபெறும் முதல் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். காலை முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்த நிலையில் நடிகர் விஜய்யும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டார். பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில் ‌ பறை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துவிட்டார். மேலும் அவர் 100 அடி உயர கொடி கம்பத்தில் முதலில் கொடியேற்றுவார். இதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் உரையாற்ற இருக்கிறார்.இந்நிலையில் நடிகர் விஜயின் முதல் மாநில மாநாட்டை இரவு 7 மணிக்கு முடிக்க வேண்டும் என்று தற்போது காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் விஜய் தற்போது விழா மேடைக்கு வந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு திடல் அலை மோதுகிறது. இந்த சமயத்தில் இரவு 7 மணிக்கே மாநாட்டை முடிக்க வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.