திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர் தொழிற்சாலை என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை 1982ல் நில நகர்ப்புற நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு எடுத்திருந்தது. இதற்கிடையில் அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன் கடந்த 1995 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை தனது அதிகாரத்தின் மூலமாக முறைகேடாக வாங்கியதாகவும், அதேபோல 178 ஏக்கர் நிலத்தையும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்போடு போலி ஆவணங்களை தயாரித்து  அபகரித்தார் என்றும், இதன் மூலமாக வீட்டு மனைகளாக அந்த நிலத்தை விற்பனை செய்து சுமார் 1700 கோடி ரூபாய் அளவில் லாபம் சம்பாதித்து இருக்கிறார் என்று டாவ்சன் என்பவர் சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்த சூழலில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கி இருந்த நிலையில், வழக்கினை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ததோடு, அவர் மீதான வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கிறது .புகார் அளித்திருந்த டாவ்சன் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டு என்பது மிகப்பெரியது. அதில், ஆவண ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும் கூட சென்னை உயர் நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ள தவறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அரசுக்கு சேர வேண்டிய மிகப்பெரிய தொகை முறைகேடாக கையாடல் செய்யப்பட்டிருக்கிறது.

எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக உச்சநீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தற்போது உச்சநீதிமன்றம்  விடுமுறையில் இருக்கிறது. எனவே அடுத்த வாரம்  நீதிமன்றம் தனது வழக்கமான அலுவல்களை தொடங்கியதற்கு பிறகு இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.