தமிழக அரசு மயோனைஸ்க்கு தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது மயோனைஸ் தயாரிக்க பயன்படும் பச்சை முட்டையால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் தமிழ்நாடு அரசு தற்போது அந்த உணவுக்கு ஒரு வருடம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதே போன்று ஏற்கனவே தெலுங்கானா அரசும் மயோனைஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.