
நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அத்துடன் 4.1 கோடி இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளார். அதில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இளைஞர்கள் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.