
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரு நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடு தான் காரணம் என்று கூறினர். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு எதிரான போருக்கு நாங்கள் ஆதரவாக இல்லை. நாங்கள் அதனை விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனை பாகிஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனம் ஒளிபரப்பியது. போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல் என்று வெளியிட்டது. இந்நிலையில் பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுனே கார்கேவால் அவர்களது கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லையா?.
அவர்கள் விரும்பியதைப் பேச அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிடும் அறிக்கைகளை பாகிஸ்தானில் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. அங்கு ஒரு ஊடகப் பிரச்சாரம் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் நம் நாட்டை இழிவு படுத்துகிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?. சித்ராமையாவிடம் ஏதேனும் கேள்வி கேட்கப்பட்டதா? யாரிடமாவது பொது மன்னிப்பு கேட்க சொல்லப்பட்டதா? இந்த அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்