
இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வு சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட். இது இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை சென்னை தீவு திடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது. இன்று முதல் வருகிற 1-ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10:00 மணி வரை சென்னை பார்முலா கார் பந்தயம் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்:காமராஜர் சாலையில்:
போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்படுகிறது. அந்த வாகனங்கள் வாலாஜா சாலை, அண்ணா சாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயிண்ட் (மத்திய ரயில் நிலையம்) ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.
மவுண்ட் ரோட்டில்:
வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயிண்ட் நோக்கி திருப்பி விடப்படுகிறது. மேலும் சிவானந்தா சாலை மற்றும் கொடிமரச் சாலை முற்றிலுமாக மூடப்படுகிறது.
வடக்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள்:
காமராஜர் சாலையில் இருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மற்றும் கிடையாது. சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல பயணிக்கலாம். இதனை அடுத்து பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை இருக்கும் ஒரு வழி பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது.
முத்துசாமி சந்திப்பில் இருந்து அண்ணா சாலை மற்றும் கொடிமரச் சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. மாறாக பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் ரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக செல்லலாம்.
கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்:
தீவு திடலை சுற்றி இருக்கும் பிரதான சாலைகள், வாலாஜா அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஈவிஆர் சாலை, முத்துசாமி பாயிண்ட், பாரிஸ் கார்னர், ஆர்.ஏ மன்றம் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.