
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து தென்காசியை சேர்ந்த மனிஷா(18) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 முறை நீட் தேர்வை எழுதியுள்ளார். தற்போது நர்சிங் படித்து கொண்டு நீட் தேர்வை எழுத மனிஷா தயாராகி கொண்டிருந்தார். வருகிற 7- ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு மனிஷா விண்ணப்பித்துள்ளார். அவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த முறையாவது தனக்கு நல்ல மதிப்பெண் கிடைக்குமா? மருத்துவராகும் ஆசை நிறைவேறுமா? என மன உளைச்சலில் இருந்த மனிஷா நள்ளிரவு நேரத்தில் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக மாணவிகள் மனிஷாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.