
நாடு முழுவதும் அடுத்த வருடம் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும். இதனால் தமிழகம் போன்ற மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே இதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தலைமையில் கடந்த 5-ம் தேதி அன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 58 கட்சிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மாநில முதல் மந்திரிகள் மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, பிரனாய் விஜயன், சித்தராமையா, பகவந்த் மான், சந்திரபாபு நாயுடு மற்றும் சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரிகள் ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
அதில் அடுத்த கட்ட கூட்டம் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும், அதில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
இதில் கேரளா முதல் மந்திரி பிரனாய் விஜயன், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உட்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தொகுதி மறு சீரமைப்பு கூட்டத்தில் ஆந்திரா முதலமைச்சரின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கவில்லை. அதேபோன்று மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கவில்லை.