மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஹோட்டலுக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் புரோட்டா வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது கணபதி புரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். அதற்கு அந்த கும்பல் உடனடியாக புரோட்டா வேண்டும் என்று கூறி கணபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கணபதியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.