சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஸ்பூர் மாவட்டத்தில் பாக்பஹார் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது நபர். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் மகள் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு தனது வீட்டில் தலையில் கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். அந்த நபரின் மகள் பக்கத்து வீட்டுக்குச் சென்று தனது தந்தையை யாரோ கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து பக்கத்து வீட்டுக்காரர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக சிறுமி பதில் அளித்ததால் அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சிறுமியின் தாயின் முன்னிலையில் சிறுமியை விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் சிறுமி கூறியதாவது, தனது தந்தை தினமும் மது அருந்திவிட்டு வந்து தனது தாயையும், தன்னையும் அடித்து துன்புறுத்துவதாகவும். அதேபோன்று கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தனது தாய் வெளியே சென்றிருந்த நிலையில், இரவு 9 மணி அளவில் குடித்துவிட்டு வீடு திரும்பிய தந்தை தன்னை அடிக்க தொடங்கியதால் ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கோடாரியால் தனது தந்தையின் தலையில் தாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் சிறுமி வேகமாக கோடாரியால் தாக்கியதால் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.