
திருச்சி லால்குடி அடுத்துள்ள பகுதியில் அன்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் லால்குடி அருகே உள்ள பகுதியில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன் சேர்ந்து அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு மது போதையில் சென்றுள்ளார்.
பின்னர் அன்பில் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் ஆகிய மூன்று பேரும் அந்த குழுவில் சேர்ந்து கொண்டனர். இதில் போதை தலைக்கேறிய பாண்டித்துரை தான் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிறகு தனது வண்டியை காணவில்லை என்று வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார். வீரமணி உடனடியாக அன்பில் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் மூன்று பேரிடம் வண்டியை கண்டுபிடித்து தர சொல்லியுள்ளார். வாகனம் அன்பில் பகுதியில் தான் உள்ளது. அதனை எடுத்துக்கொண்டு பாண்டித்துரை வீட்டிற்கு சென்றனர்.
அப்போது போதையில் இருந்த பாண்டி, சந்தோஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பாண்டித்துரை விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த ஏர்கன் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டார்.
இதில் சந்தோஷ்குமார் வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சந்தோஷ்குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பாண்டித்துரை வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அதோடு தலைமுறைவாக உள்ள பாண்டி துரையை தேடி வருகின்றனர்.