தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து செயல்பட போவதாக நேற்று அறிவித்தனர். நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இனி அதிமுகவின் இணைவுக்காகவும் எடப்பாடி போன்ற துரோகிகளிடமிருந்து ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை மீட்பதற்காகவும் இனி ஒன்றாக இணைந்து செயல்பட போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஒன்றாக இணைந்த வேளையில் தற்போது அமமுக கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். சமயபுரத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்புக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீப காலமாகவே அதிமுகவில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.