
ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று அதன் 75-வது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் சூழலில், இந்திய மாணவர்கள் 50 பேர் நவீன கொத்தடிமைத்தனத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. இதுபற்றி இந்திய தூதுரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் அச்சம் ஏற்பட கூடிய சூழலில் உதவி மற்றும் ஆலோசனை ஏதேனும் வேண்டுமென்றால், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொண்டுள்ளது. மேலும் இதுபற்றி வெளியான தகவலில், அந்நாட்டின் வடக்கு வேல்ஸ் நகரில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் காப்பகங்களை நடத்தி வந்து உள்ளதாகவும், அதில் கடந்த 14 மாதங்களாக 50 இந்திய மாணவர்கள் நவீன கொத்தடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் நலன்களுக்காக செயல்பட்டு வரும் ஜி.எல்.ஏ.ஏ. என்ற தொழிலாளர் சுரண்டலுக்கு எதிரான அரசு புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்பு சமீபத்தில் ஒரு செய்திகுறிப்பில் வெளியிட்டுள்ளது. அதில் தொழிலாளர் சுரண்டலில் ஈடுபட்டுள்ள கேரளாவை சேர்ந்த மாத்யூ ஈசாக் (வயது 32), ஜீனு செரியன் (வயது 30), எல்தவுஸ் செரியன் (வயது 25), எல்தவுஸ் குரியச்சன் (வயது 25) மற்றும் ஜேக்கப் லிஜூ (வயது 47) ஆகிய 5 பேருக்கு எதிராக கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் அடிமைத்தனம் மற்றும் கடத்தல் தொழிலுக்கு எதிராக பிறப்பித்துள்ளது. இவர்கள் அலெக்சா கேர் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் மாணவர்களை பணிக்கு சேர்த்து விட்டு, பின் வேலைக்கான சம்பளம் சரியாக தரப்படாமல் அல்லது அந்த தொகையை பிடித்து வைத்து கொள்ளுதல் போன்ற செயல்களை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அந்த மாணவர்களுக்கு சரியாக உணவு கொடுக்காமல், எப்போதும் பசியாகவும், களைப்புடனும் காணப்பட்டனர். இதனையடுத்து உடலில் துர்நாற்றம் வெளிப்பட்டுள்ளதாகவும் அரசு விசாரணை அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2022-ஆம் ஆண்டு மே வரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த 5 பேருக்கும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.