இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவில் சென்ற 2 -3 மாதங்களாக எச்3என்-2 வகையை சேர்ந்த இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் அதனுடன் கூடிய காய்ச்சலும் காணப்படும். நாட்டில் மற்றவகை இன்புளூயன்சாவை விட இந்த வகை பாதிப்புகளால் பலர் சிகிச்சைக்கு சேர்ந்து வருகின்றனர் என ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இதனால் மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி இருக்கிறது. மருத்துவர்கள் அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்படி பரிந்துரைத்து இருப்பதுடன், ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்கவேண்டாம் என ஐஎம்ஏ கேட்டு கொண்டுள்ளது.