
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் அறிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடப்பதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. இந்த இடைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக செல்வப் பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டும் என ஈரோடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், இந்திய கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் போட்டியிட உள்ளார். போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை ஆலோசனை செய்து விரைவில் தெரிவிக்கும் என செய்தியாளர்களிடம் கூறினார்.