கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு விஜய், ஜிஜேஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் ஜிஜேஸ் மனநலம் பாதித்தவர். இந்நிலையில் விஜயனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை அவரே கவனித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயன் மற்றும் அவரது மகன் ஜிஜேஷ் இருவரும் தங்களது வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதோடு  இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மகன் ஜிஜேஸ் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இதனால் மகனுக்கும் விஷம் கொடுத்து விஜயனும் விஷம் குடித்துள்ளார் என்பது போலீசின் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் எதற்காக விஜயன் இந்த முடிவை எடுத்தார் என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. விஜயன் தனது மனநலம் பாதித்த மகனை மிகவும் சிரமப்பட்டு கவனித்து வந்திருக்கிறார். மேலும் அவர் பண பிரச்சனையாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக விஜயன் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கருதப்படுகின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.