
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவருக்கு வனஜா என்ற மனைவியுள்ளார். சுந்தரம் வனஜா தம்பதியினருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் சுந்தரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நல குறைவால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுந்தரத்தை மருத்துவமனையில் அவரது மனைவியும்,மகனும் கவனித்து வந்துள்ளனர். இதற்கிடையில் தந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பது சந்துருவை மிகவும் பாதித்துள்ளது. இதனால் சந்துரு கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். ஜனவரி மாதம் 5ஆம் தேதி இரவு சந்துரு தனது தந்தை சுந்தரத்தை மருத்துவமனையில் கவனித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அவரது தாயார் வனஜாவிடம் மறுநாள் காலை வந்து கவனித்துக் கொள்வதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்படி மறுநாள் காலை மருத்துவமனைக்கு வருவதாக சொன்ன சந்துரு வரவில்லை. அதனால் தாயார் வனஜா, சந்துருவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் சந்துரு போனை எடுக்கவில்லை. பலமுறை அழைத்தும் போனை எடுக்காததால் சந்தேகித்த வனஜா அருகில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு போன் செய்து சந்துருவை அழைத்து வருமாறு கூறியுள்ளார். உடனே அந்த உறவினர் சந்ருவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு வீட்டின் கதவு உள்புறம் ஆக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகத்தில் வீட்டின் பின்புறம் சென்று அந்த உறவினர் பார்த்துள்ளார்.
அங்கு சந்துரு தூக்கில் பிணமாக தொங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் சந்துருவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தியதில் சுந்தரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது சந்துருவை மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதனால் சந்துரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையின் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மகன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.