பெங்களூர் எலகங்கா விமான நிலையத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியை முன்னிட்டு பெங்களூர் கவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது, அதாவது இன்று முதல் வருகிற 11-ம் தேதி வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையும் அதன் பின் இரண்டு மணி முதல் 5 மணி வரையும் விமானங்கள் இயக்கப்படாது.

இதே போல் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், 13-ஆம் தேதி மட்டும் 9 மணி முதல் 12 மணி வரையும், 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் 2.30 மணி  வரையும், 16-ஆம் தேதி மற்றும் 17-ஆம் தேதி காலை 9:30 மணி முதல்  12 மணி வரையும், அதன் பின் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படாது என கூறியுள்ளார். மேலும் சாகசத்தில் ஈடுபடும் விமானங்கள் அணிவகுத்து நிற்கவும் பயிற்சியில் ஈடுபடவும் வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.