பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல தமிழக முழுவதும் 25,752 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகைக்கு தங்களது ஊருக்கு செல்ல வருகிற 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்கி வரும் 20,092 பேருந்துகளுடன் சேர்த்து 5736 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

இதேபோன்று பிற ஊர்களில் 7800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோன்று பொங்கல் பண்டிகை முடித்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5290 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 6926 பேருந்துகள் என்று மொத்தம் 1216 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சை வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும், வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை வழியாகச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி வழியாகச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகளும் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சியில், சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தார்.