
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கவுண்டம்பபுரத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த 21 வயது இளம்பெண்ணை அருள்மணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அருள்மணி தனது மனைவியின் செல் போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் இளம் பெண்ணின் சாதி குறித்து திட்டியும், இளம்பெண் அவரது தாய், தங்கை ஆகியோரது புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாண படத்தை வெளியிடுவேன் எனவும் கூறி மிரட்டல் வைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அருள்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.