திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவில் பலவேசம் என்பவரது மகள் முத்துலட்சுமி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமான நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகன் என்பவரை முத்துலட்சுமி 3-வது திருமணம் செய்து கொண்டார். இதில் இரவில் வீட்டில் முத்துலட்சுமி தலையில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மணிமுத்தாறு காவல்துறையினருக்கு இது பற்றி தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வீட்டில் முத்துலட்சுமியின் கணவரான முருகனும் இல்லை என்பதால் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை வருவது தெரியவந்தது.

அதே போல வந்த பிரச்சனையில் ஆத்திரமடைந்த முருகன் அருகில் கிடந்த கட்டையால் தனது மனைவி முத்துலட்சுமியின் தலையில் சரமாரியாக அடித்ததுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது எனினும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தலைமறைவான முருகனை பிடித்து கைது செய்ததோடு அவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.