
மாவட்ட கலெக்டர்கள் அவ்வபோது குறை தீர்க்கும் முகாம் போடுவது வழக்கம். அந்த முகாமிற்கு வரும் மக்கள் வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, ஓய்வூதியம், மின் இணைப்பு போன்றவை கேட்டு விண்ணப்பிப்பதுண்டு. ஆனால் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் ஹெலிகாப்டர் வேண்டும் என்று கலெக்டரிடம் விண்ணப்பித்திருப்பது அதிகாரிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பார்மர் மாவட்ட கலெக்டர் தினா தபி என்பவர் ஜோர்புரா கிராமத்தில் குறை தீர்க்கும் முகாம் ஒன்றை நேற்று முன்தினம் நடத்தினார். அப்போது அங்கு வந்த மங்கி லால் என்பவர் கலெக்டரிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில் அவர் எனது வீட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து விட்டனர். அந்தப் பாதைகளில் அவர்கள் கடந்த சில நாட்களாக விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் என்னுடைய வீட்டுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. எனவே நான் வீட்டிற்கு சென்று வர ஹெலிகாப்டர் ஒன்றை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே தாசில்தாரை அழைத்து இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி மங்கி லால் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த தாசில்தார் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.