
மதுரை மாவட்டம் பூலாம்பட்டி என்னும் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய பாட்டியின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் இளமாறன் நேற்று மதியம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவருடைய பாட்டி கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவை இளமாறன் திறக்காததால் சந்தேகத்தில் அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது இளமாறன் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.
இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடல் புதூர் காவல்துறையினர் இளமாறனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கல்லூரியில் பயின்று வரும் அவர் செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.