
தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு வேலை எதுவும் கிடைக்காததால் குடி போதைக்கு அடிமையாகி அனுதினமும் குடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி அதிகாலை இவரது தாயார் ராதிகா தன்னுடைய அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அங்கே சென்ற கார்த்திக் ராதிகாவை கத்தியால் குத்தினார். அப்போது ராதிகாவின் அலறல் சத்தத்தை கேட்டு சந்தீப் மற்றும் அவரது மனைவி ஓடி வந்தனர். அவர்களையும் வாலிபர் கத்தியால் குத்த முயன்றார். அப்போது அவர்கள் தப்பித்து வேறு அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டனர். அதன் பின் கார்த்திக் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராதிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து கார்த்திகை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கார்த்திக் குடி போதைக்கு அடிமையாக இருந்ததால் அவருடைய பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனாலும் அவர் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாமல் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவர் தனது பெற்றோரிடம் 100 கோடி சொத்துக்களில் தனக்குரிய சொத்தை பிரித்து தரும்படி அனுதினமும் சண்டையில் ஈடுபட்டுள்ளார். தரவில்லையென்றால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்காக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் கத்தியை வாங்கி உள்ளார். அந்த கத்தியை கொண்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் ராதிகாவை கொலை செய்துள்ளார் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.