
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் கிடங்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷேக் சம்சுதீன் என்பவர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கிடங்கின் முகப்பில் இருக்கும் பெயர் பலகையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கை மேலே சென்ற மின் கம்பியில் உரசியது.
இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷேக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.