
சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சுப்பிரமணியன் நகர் வெங்கடேஸ்வரா 3-வது தெருவில் ஸ்ரீபிரியா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீ பிரியாவின் 1 அக்கா மற்றும் 2 தங்கைகளுக்கு ஏற்கனவே திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபிரியாவின் தந்தை மூக்கையா பாண்டியனும், 2 மாதங்களுக்கு முன்பு தாய் சரஸ்வதியும் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டனர். இதனால் பிரியா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்து மொபட்டை பார்க்கிங் செய்துள்ளார். பின்னர் 4 வது நடைமேடையில் நடந்து வந்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் ஸ்ரீ பிரியாவின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ஸ்ரீபிரியா ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேண்டுமென்றே தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.