கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்து லிங்கை கிளிக் செய்து சுதா தனது விவரங்களை பதிவு செய்தார். அதன் பிறகு சுதாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் குறைந்த முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பி சுதா சிறிது சிறிதாக 15 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. செலுத்திய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதுகுறித்து சுதா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.