
கடந்த 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு நிலையம் என பெயர் சூட்டி உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டதால் பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.
அதனை மீண்டும் வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். கடந்த மார்ச் மாதம் நடந்த விமான நிலைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டி.ஆர்.பாலு எம்.பி விரிவாக்க பணிகள் முடிந்து விட்டதால் மீண்டும் காமராஜர் மற்றும் அண்ணா பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 8- ஆம் தேதி பிரதமர் மோடி விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை திறந்து வைத்த பிறகு அந்த கட்டிடத்தில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் அண்ணா பன்னாட்டு முனையம் என பெயர் பலகை வைக்கப்பட்டது. மேலும் உள்நாட்டு முனையத்தில் காமராஜர் உள்நாட்டு மையம் எனவும் பெயர் பலகை வைக்கப்பட்டது. விமான நிலைய முனையங்களுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர்களின் பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு பயணிகள் வரவேற்பு அளித்தனர்.