
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இளையராஜா இசையமைப்பில் வெளியான ‘திவ்ய பாசுரம்’ என்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்தம் மண்டபத்திற்குள் நுழைய முயற்சி செய்தார். அப்போது அருகில் இருந்த ஜியர் மற்றும் பட்டர்கள் அவரை தடுத்து நிறுத்தி வெளியே நிற்குமாறு கூறினர்.
இதைத்தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை வழங்கினர். அதன் பின் வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் கண்டு ரசித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் கூறியதாவது, ஜீயர்கள் தவிர வேறு யாரும் அந்த அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முடியாது. அர்த்த மண்டபத்துக்குள் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.