
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கணேசன் மற்றும் காந்திமதி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் தேயிலைத் தோட்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து கணேசன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையிலும், காந்திமதி சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கணேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.