அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தசாமி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊர் நாட்டாமையாக இருக்கிறார். நேற்று மதியம் கோவிந்தசாமி தனது வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தசாமி இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து கோவிந்தா சாமி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்களும், பொதுமக்களும் விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

அப்படி அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கோவிந்தசாமி அணிந்திருந்த 1 பவுன் மோதிரம், அவரிடம் இருந்து 5000 ரூபாய் பணம் காணாமல் போனது போலீசார் நடத்தி விசாரணையில் தெரியவந்தது.