இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அ.தி.மு.க வேட்பாளரை, பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இடைத் தேர்தலுக்கு குறுகியகாலம் மட்டுமே உள்ளதால் வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் வாயிலாக மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.

அந்த வகையில் அதிமுக அமைப்பு ரீதியாகவுள்ள 75 மாவட்டங்களில்  சுமார் 2,675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளதை போன்று, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் போன்றோருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் இன்று மாலை 7 மணிக்குள் எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்துள்ள வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் (அ) மறுக்கிறேன் என்ற விபரத்தை தெரிவிக்கவேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பிற்கு தமிழ்மகன் உசேன் தெரிவித்து உள்ளார்.